Skip to main content

'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடையீர்,

அனேகரைப் போலவே எனது வலைப்பதிவிலும் 'தேனீ' இயங்கு எழுத்துருதான் நண்பர்கள் அமைத்துத் தந்தார்கள். அதனைத் தந்த உமர் அவர்கள் மறைந்துவிட்டார் என்னும் செய்தி வருத்தத்தினை அளிக்கிறது.

துபாயில் அவரது அறைத்தோழராக இருந்த எனது நண்பர் ரஃபியா அவர்களிடம் துக்கம் விசாரிக்கும்போது, உமர் அவர்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட செய்திகளை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உமர் என்று நம்மால் அழைக்கப்படும் அவரது முழுப்பெயர் உமர் தம்பி. தஞ்சை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 55இற்குள்தான் இருக்கும். மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர்மொய்தீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.

இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. இருபது ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், சென்ற ஆறுமாதங்களுக்கு முன்னர் துபாயில் தனது பணியை முடித்துவிட்டு 'ஒருவழியில்' தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளான உமர் அவர்கள் சென்ற மூன்றாண்டுகளாக தொண்டைப் புண்ணாலும் தொல்லைக்குள்ளாகியிருக்கிறார். துபாயிலிருந்து மும்பைக்கு வரும் வழியில், விமானத்தில் உணவருந்தும்போது விழுங்குவதில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு உணவு தொண்டையில் சிக்கியிருக்கிறது. தொடர்ந்த மூச்சுத்திணறல் விமானத்தைப் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. தரையிறங்கியதும் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன.

தொண்டைப் புண்ணிற்கு அதன் பின்னர் சரியான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறார். சில சமயங்களில் மிகுந்த சிரமத்துடன் தலையைச் சாய்த்தே வைப்பது முதலான பல அசௌகரியங்களுக்கு ஆளாகியும் தளர்ந்துவிடாமல் எழுத்துருக்களுக்கான தனது சேவையைத் தொடர்ந்து செய்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர் மேலிருந்த மதிப்பு அதிகமாகின்றது.

அவருக்கு மூன்று மகன்கள். அதில் மூத்த மகனின் திருமணம் சென்ற வாரத்தில்தான் நடந்திருக்கின்றது. மற்ற இரண்டு மகன்களும் மாணவர்கள்.

உமருக்கும் அவரது அண்ணனுக்கும் ஏறக்குறைய பத்தாண்டுகள் வயது வித்தியாசம் இருக்குமாம். ஆனாலும், துபாயில் தமிழர்கள் அதிகமாகக்கூடும் சிக்கத்அல்கைல் வீதியில் அவர்கள் நடந்து செல்வதைப் பார்த்தால் இரண்டு நண்பர்கள் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு நடப்பதைப் போலத்தான் இருக்குமாம். அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் 'என்ன இது அண்ணன் தம்பி உறவா, நட்பா' எனப் பலமுறை வியந்திருக்கிறார்களாம்.

இப்படிப் பல நற்பண்புகளைக் கொண்டிருந்த உமர் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவரது இழப்பைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தார் பெறவும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

அன்புடன்
ஆசாத்

Comments

nayanan said…
திரு.உமரின் மறைவுச் செய்தி வெளியூரில்
இருந்த போது சில நாள்களுக்கு முன்னர்
கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

தமிழ் உலக மடற்குழுவில் படித்திருக்கிறேன்.
அவர் எழுத்துக்களில் அமைதியும் பண்பும்
நிறைந்திருக்கும்.

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை
வேண்டுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியல்

ஷோபா சக்தியின் பதிவில் தம்பி திரைப்படத்துக்கான விமர்சனத்தில் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைச் சொல்லும்போது 136 படங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார் (//எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில்...//). சில இடங்களில் 137 என்றும் படித்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பட்டியல் 134 அல்லது 135 என்று சொல்கிறது. தலைபோகிற காரியம் இல்லைதான், ஆனாலும், இந்தப் பட்டியலைத் தந்து விடுபட்டிருக்கும் அந்த இரண்டு அல்லது மூன்று படங்களின் விவரம் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்தப் பதிவு. இப்பட்டியலில் இல்லாத படங்களின் பெயர்கள் நண்பர்கள் பெரியோர்களுக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் தயைகூர்ந்து விவரம் சொல்லவேண்டுகிறேன். படம் - வருடம் - இயக்குனர் 1. சதிலீலாவதி - 1936 - எல்லீஸார் டங்கன் 2. இரு சகோதரர்கள் - 1936 - எல்லீஸார் டங்கன் 3. தட்ஷயக்ஞம் - 1938 - ராஜா சந்திரசேகர் 4. வீர ஜெகதீஷ் - 1938 - டி.பி.கைலாசம், ஆர்.பிரகாஷ் 5. மாயா மச்சீந்த்ரா - 1939 - ராஜா சந்திரசேகர் 6. பிரஹலாதா - 1939 - பி.என்.ராவ் 7. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 - டி.ஆர்.ரகுநாத் 8. அசோக்குமார் - 1941 - ராஜா சந்திரசேகர் 9. தமிழ் ...