Skip to main content

ஐந்து வெண்பாக்கள் - போட்டிக்காக

1.
வளைந்த முதுகெலும்பை வாணாளில் கொண்டு
விளைந்த சரணங்கள் வீணே - களைந்தெடுத்து
நெஞ்சத்(து) இருக்கும் நெடும்பயப் பேயோட்ட
கொஞ்சம் கிடைக்காதோ கோல்!

2.
வல்லமை பெற்றிருந்தும் வாயடைத் தேயிருக்கும்
நல்லவ ராலேதும் நன்மையுண்டோ - கொல்லுலையாய்
நெஞ்சக் கனலெழுப்பி நேர்மைக்கு வாள்பிடிக்க
கொஞ்சம் கிடைக்காதோ கோல் !

3.
எவரோ உதிர்த்திடும் எண்ணச் சலவை
தவறாமல் தூண்டித் தகிக்கும் - அவதூறு
நெஞ்சத்(து) இருக்காமல் நீக்கி விரட்டிடவே
கொஞ்சம் கிடைக்காதோ கோல்!

4.
அஞ்சித் தினமும் அகத்துள் அடைபட்டு
கெஞ்சி யழைத்தாலும் கேளாது - மிஞ்சியொரு
நெஞ்சத்(து) உறங்குகின்ற நீதி விழித்தாட்ட
கொஞ்சம் கிடைக்காதோ கோல்!

5.
கைக்கிளை யேறிக் கரமொடிந் தோர்மனப்
பொய்க்கிளை சோகப் புனல்நீக்கி - மெய்க்கிளை
நெஞ்சத்(து) இருக்க நிதமும் துணையாக
கொஞ்சம் கிடைக்காதோ கோல்!

*

அன்புடன்
ஆசாத்

பி.கு.:

நல்ல தமிழில் எழுது என பெரியோர்கள் சொல்லிய சொல்லைக் கேட்டதனால் விளைந்த ஐந்து வெண்பாக்களையும் போட்டிக்கு அனுப்பிவிட்டேன்.

எங்கியாச்சும் தப்பு பண்ணா, பெரியவங்க சொன்னா கேட்டுக்கணும். திருத்திக்க முயற்சி பண்ணணும். ஆ..ஊ..அது இது அப்படித்தான்னு அடம் பிடிச்சிருந்தா இந்த முயற்சிய செஞ்சிருக்க முடியுமா.

Comments

Anonymous said…
இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன்.
முதல் வாக்கு என்னுடையதுதான் உங்களுக்கு.

பெரியவங்க சொன்னா கேட்டுக்கணூமா?
எளக்கியவாதியா ஆவுறதா 'எண்ணமே' இல்லையா?

ஆசிப் மீரான்
ஓகை said…
ஆசுகவி என்றுநான் ஆசாத்தை சொல்லுவேன்
பேசுகவி இன்று பிறப்பித்தார் - மாசறு
கொஞ்சம் கிடைக்காதோ கோலென்று வெண்பாக்கள்
நெஞ்சம் நிறைந்தது நின்று.
nayanan said…
அன்பின் ஆசாத் அய்யா,
வணக்கம்.

தங்களின் இயல்பான அருவி போன்ற
கவிதைகள். எல்லாமே அருமை எனினும், என்னை மிகவும் மகிழ்வித்தது இந்தக் கவிதை.
//
வல்லமை பெற்றிருந்தும் வாயடைத் தேயிருக்கும்
நல்லவ ராலேதும் நன்மையுண்டோ - கொல்லுலையாய்
நெஞ்சக் கனலெழுப்பி நேர்மைக்கு வாள்பிடிக்க
கொஞ்சம் கிடைக்காதோ கோல் !
//

நமது மக்களின் தற்போதைய நிலைமையை
சொல்லும் பாடல். அதுமட்டுமல்ல,
"பைசா சூனியம்" என்றொரு குணம் உண்டு. இருந்தும் கொடுக்காத
"இல்லாதவரை"ச் சுட்டும் சொல் அது.
அச்சொல் இப்பாட்டைப் படிக்கும் போது
நினைவுக்கு வந்தது. மகிழ்ச்சி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
இனிய ஆசிப்,

நன்றிகள்.

எளக்கியவாதியவிட நெஞ்ச எளக்கியவாதியானா நல்லதுதான :)

எளக்கணும் -நெல்லை வழக்குதானே 'இளகவைக்கவேண்டும்'

*

நடராஜன் அய்யா, இளங்கோவன் அய்யா,

உங்கள் இருவரால்தான் இந்த ஐந்து வெண்பாக்களும் உருவாயின. ஒருவேளை பரிசு கிடைத்தால் (பெரும்பாலும் கிடைக்காது), அதற்குக் காரணம் நீங்கள் இருவர்தான்.

அன்புடன்
ஆசாத்
திரும்பவும் வெண்பா, சில வாக்கியங்களுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், ஒருவாறு ஊகித்து படிக்க முடிகிறது..

வாழ்த்துக்கள் !

***

இங்கே கோல் என்று எதைச் சொல்லுகிறீர்கள் ??

***

2-வது வெண்பா, மிகவும் பிடித்தது :-)

***

எனது விமர்சனத்தில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன், அது எனது கருத்து மட்டுமே, அதற்காக வெற்றி பெற முடியாது என்று நினைக்காதீர்கள்,
தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள் !!

***

நேரமிருப்பின் வெண்பா பற்றியும், எப்படி எழுதுவது என்பதையும், இலக்கணத்தையும் சற்று விளக்குங்களேன் தனிப் பதிவில் !!
நன்றி !!
இனிய பையன்,

கோல் - அடிப்படையில் ஒரு தோள், ஒரு துணை, ஊக்கம் கொடுக்கும் துணை. ஆங்கிலத்தில் லிஃப்ட், புஷ், சப்போர்ட் எப்படிவேண்டுமானாலும் சொல்லலாம்.

வெண்பாவில் அமைத்ததன் உட்பொருளும் அதுதான்.

ஆனாலும், முதலிரண்டு வெண்பாக்களில் அதனைக் கோலாகவும் பொருள் கொள்ளலாம்.

1.பேய் ஓட்டுகின்ற மந்திரக்கோல்
2.செங்கோல்

*

அய்யா,

உங்கள் கருத்திற்காகத்தானே எனது பின்னூட்டமும்.

போட்டி முடிவுகள் நான் எழுதுவதை எந்த விதத்திலும் குறைக்காது, ஆனாலும், பரிசு கிடைக்காமற்போனால் நிச்சயம் கொஞ்சநேரம் வருத்தப்படுவேன், அவ்வளவே.

ஏனென்றால், முழுத்திறனையும் வெளிக்கொணர்ந்துதான் ஒவ்வொரு படைப்பையும் தருகிறோம். சும்மா அமர்ந்து தட்டச்சினால் தளைதானே தட்டும். அந்த முயற்சிக்கு அங்கீகாரம் இல்லையென்றாலு*ம்* எனக்கு வருத்தம் வராது என்று சொல்வதற்கு நான் ஞானியல்லன்; மனிதன் :)

வருத்தப்படுவேன்...உடனே துடைத்துப் போட்டுவிடுவேன். இதுவே நான் கலந்துகொள்ளும் கடைசிப்போட்டி அல்லவே :)

அன்புடன்
ஆசாத்
ENNAR said…
பாபடைத்திட்ட பாவலருக்கு நான் பகர்வது
வாழ்த்து நற்பா சொற்பா கேளப்பா
Anonymous said…
வெண்பா வாசித்தேன். அருமை. ஒற்றை வரியில் சொல்வதானால், இங்கே...
இன்பத் தமிழில் இயல்பாய் எழுதிடும்
அன்புக் கவிஞராம் ஆசாத் - அன்னார்போல்
அன்பை கடமை அதுபோல் உயர்வையும்
வெண்பா வடிக்கலாம் வா!

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

எம்.ஜி.ஆர். படங்களின் பட்டியல்

ஷோபா சக்தியின் பதிவில் தம்பி திரைப்படத்துக்கான விமர்சனத்தில் எம்.ஜி.ஆர். திரைப்படங்களைச் சொல்லும்போது 136 படங்கள் எனக் குறிப்பிட்டிருந்தார் (//எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில்...//). சில இடங்களில் 137 என்றும் படித்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் பட்டியல் 134 அல்லது 135 என்று சொல்கிறது. தலைபோகிற காரியம் இல்லைதான், ஆனாலும், இந்தப் பட்டியலைத் தந்து விடுபட்டிருக்கும் அந்த இரண்டு அல்லது மூன்று படங்களின் விவரம் கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால்தான் இந்தப் பதிவு. இப்பட்டியலில் இல்லாத படங்களின் பெயர்கள் நண்பர்கள் பெரியோர்களுக்குத் தெரிந்திருக்கும் பட்சத்தில் தயைகூர்ந்து விவரம் சொல்லவேண்டுகிறேன். படம் - வருடம் - இயக்குனர் 1. சதிலீலாவதி - 1936 - எல்லீஸார் டங்கன் 2. இரு சகோதரர்கள் - 1936 - எல்லீஸார் டங்கன் 3. தட்ஷயக்ஞம் - 1938 - ராஜா சந்திரசேகர் 4. வீர ஜெகதீஷ் - 1938 - டி.பி.கைலாசம், ஆர்.பிரகாஷ் 5. மாயா மச்சீந்த்ரா - 1939 - ராஜா சந்திரசேகர் 6. பிரஹலாதா - 1939 - பி.என்.ராவ் 7. வேதவதி அல்லது சீதா ஜனனம் - 1941 - டி.ஆர்.ரகுநாத் 8. அசோக்குமார் - 1941 - ராஜா சந்திரசேகர் 9. தமிழ் ...